சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர்

சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார்.
தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது ஆதரவை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர் ஜாதிஹ ஹெல உறுமயவிலிருந்து விலகியுள்ளார்.
55 வயதான சம்பிக்க ரணவக்க மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தவர்- இரு தரப்பின் சார்பாகவும் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்.
தனது பதவிவிலகலை அறிவித்து ஆற்றிய உரையின் போது அவர் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்கு தலைமைத்துவத்தை வழங்கவிரும்புகின்றேன்.
ஜனாதிபதிய கோத்தபாய ராஜபக்ச குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உருவாக்கிய போலியான தோற்றம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
அவர் குறித்து உருவாக்கப்பட்ட போலியான பிம்பம் சிதைவடைய- நொருங்க ஆரம்பித்துள்ளது.
இந்த தலைவர்களின் உண்மையான முகங்கள் தெரியதொடங்கியுள்ளதால் மக்களின் நம்பிக்கைகள் நொருங்கத்தொடங்கியுள்ளன.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அடித்தளம் வஞ்சகர்கள் திருடர்களால் ஆனது.
ஆளும் கட்சி தற்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள்,கசிப்பு வியாபாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட குற்றவாளிகளின் பிடியில் உள்ளது என்பதை மக்கள் தற்போது உணரத்தொடங்கியுள்ளனர்.
இவர்களிற்கு பௌத்தமதகுருமார் ஆதரவளிப்பது கவலையளிக்கின்றது.
தற்போது இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் பௌத்தமதகுருமார்கள் ஆழ்ந்த தத்துவவாதிகள் இல்லை,அரசியல் நோக்கங்கள் தன்னலங்கள் கொண்டவர்கள்.
அரசாங்கம் பொருளாதாரத்தை மிகவும் தவறாக கையாள்வதன் காரணமாக அதனால் கடன்களை கூட மீள செலுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது.
நாங்கள் ஒருபோதும் கடன்களை செலுத்துவதற்கு தவறியதில்லை ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு கடன்களை பெறுவதை பிற்போடுமாறு மன்றாடினார்.
1950களில் நாட்டின் சுதேசிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்ட போதிலும்,நாட்டின் ஆட்சி உரிமை தங்களிற்கு மாத்திரம் உரியது எனகருதிய வர்க்கத்திடமே ஆட்சி உரிமை இருந்துவந்துள்ளது, இது மாற வேண்டும்.
ஆனால் நாட்டின் தற்போதைய சமூக பொருளாதார மாற்றங்கள் முன்னேற்றங்களிற்கு புதிய தலைமுறையை சேர்ந்த கல்வி கற்றவர்களே காரணமாகயிருந்துள்ளனர். இவர்கள் பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் இல்லை.
நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்கின்றேன்,அந்த கட்சி ஐக்கியதேசிய கட்சியாக விளங்கப்போவதில்லை உண்மையான ஜனநாயக கட்சியாக விளங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
எனினும் அந்த கட்சி தெரிவித்தபடி நடக்கின்றதா என்பதை உறுதி செய்த பின்னரே அந்த கட்சியில் இணைவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
1980களில் ஜேவியின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசியல் அனுபவம் பெற்ற சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு அரசியல்வாதி என்ற தோற்றத்திலிருந்து விடுபட்டு அரசியல்மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக தான் அடையாளம் காணப்படுவதை விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
பிரிவினைவாதிகளிற்கு எதிரான போரை தமிழ் மக்களிற்கு எதிரான தேசிய பாதுகாப்பு விடயமாக மாற்றிய பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கத்திற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க தமிழர் எதிர்ப்பு இனவாதியாக பார்க்கப்பட்டார்.