மாவனெல்லையில் வெடிபொருட்கள் காணாமல்போன விவகாரம் : வழக்கு விசாரணை சி.ஐ.டி.யிடம்

மாவனெல்லை, துங்ககந்தவில் கல்லுடைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 19 கிலோ வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான விசாரணைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய சி.ஐ.டி. பணிப்பாளரின் நியமனத்தால் பல சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம் கோரல் | Virakesari.lk

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இந்த விசாரணைகளை சி.ஐ.டி.யினரிடம் கையளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், மாவனெல்லையை மையப்படுத்தி புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும், தற்போது காணாமல் போயுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டே இந்த விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் சி.ஐ.டி.யின் 5 குழுக்கள் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. 32 அதிகாரிகள் இந்த விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கல்லுடைப்புக்காக, மாவனெல்லை, நியூ லேன்ட் தோட்ட, கல் குவாரி ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காணாமல் போனதையடுத்து கடந்த 23 ஆம் திகதி மாவனெல்லை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

எவ்வாறாயினும் அம்முறைப்பாட்டில் அங்கு சேவையில் இருந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அவற்றை களாவடியமைக்கான சான்றுகள் இன்று வரை உறுதி செய்யப்படாத நிலையிலேயே விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.