வடக்கு மாகாண பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் மருத்துவர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளக் கூடியதாகவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எனவே தற்போதைய நிலையில் எமக்கு அண்டிஜன் பரிசோதனை தற்போதைய நிலைமையில் தேவையற்ற ஒன்று என தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக ஏனைய மாகாணங்களில் குறித்த அண்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது. ஏனெனில் அந்த மாகாணங்களில் எமது மாகாணத்தை போல பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதன் காரணமாக அவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

அத்துடன் அண்டிஜன் பரிசோதனையில் ஒரு சில நம்பிக்கையில்லா தன்மையும் காணப்படுகின்றது. அண்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று என காண்பிக்குமாயின் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் போது அவருக்கு தொற்று இல்லை என காண்பிக்கும் அதே போல் அண்டிஜன் சோதனையின் போது ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தியவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படும்.

எனவே அண்டிஜன் பரிசோதனை என்பது மிகவும் நம்பகரமான சோதனை முறை அல்ல மேலும் வடக்கு மாகாணத்தில் போதியளவு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணமாக நாம் தற்போது அதைப் பற்றி பரிசீலிக்கத் தேவையில்லை.

அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து ஆனையிறவு மற்றும் பூநகரிப் பாதை ஊடாக வருவோருக்கு நாம் அதிகாலை வேளைகளில் பி.சி.ஆர் சோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தோருக்கு நாம் ஒவ்வொரு நாளும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.