பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸ்! இலங்கையிலும் பரவும் வெளியானது புதிய தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவென தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இல்லையென்ற போதிலும் அதற்கு ஒத்த வைரசே பரவிக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்று பரவியுள்ள காரணத்தினால் எந்த பகுதியை முடக்குவது, எங்கு பாதுகாப்பாக உள்ளதென அறிவிக்கவோ தீர்மானம் எடுக்கவோ முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் கொரோனா வைரஸ் இன்னமும் சமூக தொற்றாகவில்லை என அரசாங்கமும், சுகாதார அமைச்சும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதிலும் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் நிலைமைகள் குறித்து பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகனவிடம் வினவியபோதே அவர் கூறியதானது,

நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளது, இப்போது நாட்டில் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாலம் காணப்பட்டு வருகின்றனர் என்றால் நாட்டில் வைரஸ் பரவல் அதிகம் என்பதே அதன் அர்த்தமாகும்.

இது சமூக தொற்றா அல்லது கொத்தணிகளா என்பது விவாதமல்ல, வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகும்.

அரசாங்கம் சகல பகுதிகளையும் திறந்தவுடன் மக்கள் பொறுப்பு, கட்டுப்பாடுகள் சுகாதார வழிமுறைகள் என எதனையும் கருத்தில் கொள்ளாது அனாவசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டதன் விளைவே இப்போது அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணவும் காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளது, சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளனர், ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக கடந்த செயலணிக் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எது எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் இப்போது பரவும் வைரஸ் வழமையாக இதுவரை காலமாக இலங்கையில் காணப்பட்ட வைரஸ் அல்லாது பிரித்தானியாவில் காணப்படும் வைரஸுக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனவே அரசாங்கம் இப்போது எடுக்கும் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. இப்போது நாம் தவறிழைப்பது மீண்டும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேபோல் இறுதியாக கூடிய கொவிட் செயலணிக் கூட்டத்தில் பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் அரசாங்கத்துடன் கடுமையான கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் நிலைமைகள் இவ்வாறே செல்லுமானால், சுகாதார அதிகாரிகளுக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தடுக்கப்பட்டு இராணுவம் சகல விடயங்களிலும் தலையிடும் என்றால் தாம் செயலணிக் கூட்டத்தில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.