சிறிலங்காவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை! பிரித்தானியாவின் அறிவிப்பும் வெளியானது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை தொடர்பான புதிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையையும் இங்கிலாந்து பரிசீலிக்கும் என கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று வெளியான நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

The UK will be considering the important new @UNHumanRights report on Sri Lanka.

We will continue to support human rights and accountability in Sri Lanka at the upcoming session of UN Human Rights Council.

Full report here: https://t.co/rcSr9sbWwC

— Julian Braithwaite (@JulianWTO_UN) January 27, 2021
அதில்” இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.

எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பிரித்தானியா ஆதரவு வழங்கும் என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் அந்தக் குழு,

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறும் பட்சத்தில், ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளும் இணைந்து ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஏனைய மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்த முற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது,