சிறைச்சாலைகளில் 11 பேருக்கு தொற்று

சிறைச்சாலைகளில் கொவிட்-19 கொத்தணியில் புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கொவிட்-19 கொத்தணியின் காரணமாக வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைவடைந்து வந்த போதிலும் , நேற்று தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

4 அதிகாரிகள் உட்பட 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இதுவரையில் 141 அதிகாரிகள் உட்பட 4,600 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 132 அதிகாரிகள் உட்பட 4,364 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 9 அதிகாரிகளும் , 215 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.