கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஏன் வழங்க முடியவில்லை – இந்திய தூதுவரிடம் விளக்கிய மகிந்த

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாத்திரமல்லாது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர அனுசரணை வழங்கிய சக்திகளில் 99 வீதமானவர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்ப்பதால், அந்த தீர்மானத்தை இரத்துச் செய்ய நேரிட்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிற்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவிக்க, இந்திய தூதுவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளார்

இரண்டு நாடுகள் கையெழுத்திட்ட உடன்படிக்கையை இலங்கை ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்தமைக்கான நியாயமான காரணத்தை இந்திய அரசாங்கத்திற்கு தன்னால் விளக்குவது சிரமமாக உள்ளதாகவும் இந்திய தூதுவர் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கு வழங்காத துறைமுகத்தின் கிழக்கு முனையம் வேறு ஒரு பலமிக்க நாட்டுக்கு வழங்கப்படுமா எனவும் இந்திய தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவை அனைத்துக்கு பதிலளித்துள்ள அரசாங்கத்தின் பிரதானிகள், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கினாலும் அதனை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தொழிற்சங்கங்களின் உதவி கிடைக்காது எனக் கூறியுள்ளனர்.

இதனால், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 வீத பங்குகளை பெற்றுக்கொண்டு அதனை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதியும், பிரதமரும், இந்திய தூதுவரிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.