யாழில் முதலாவது கோவிட் – 19 மரணம் – உறுதி செய்தார் வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் முதலாவது கோவிட் மரணம் பதிவாகி உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்தியருமான ஆ.கேதீஸ்வரன் உறுதி செய்துள்ளார்.

வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கோவிட் – 19 தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று மீண்டும் மாற்றப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது சடலம் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் தகனம் செய்யப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.