இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சர்வதேச ரீதியில் பெரும் பாராட்டு!

கோவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் முடிவை மாற்றிய இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டுவதாக உலக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​உலக முஸ்லிம் லீக் இன் பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது அல்-இசா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் உலக முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச் செயலகமும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்றது.

தொற்றுநோய்களின் போது பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களை தகனம் செய்வதைத் தவிர்க்கவும், இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அடக்கம் செய்யவும் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.

இதேவேளை, கோவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்யும் முடிவில் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் மாற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.