ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தால் நெருக்கடிகள் அதிகரிக்கும்!3 தெரிவுகளே அரசுக்கு உள்ளன என்கிறார் தயான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி.தயான் ஜயத்திலக தெரிவித்திருந்தார்.

 

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன என்றும் அதில் எதனைத் தெரிவு செய்யப்போகின்றது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் நிறைவேற்றப்படும் இலங்கை பற்றிய தீர்மானத்தினை நிராகரிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

துரதிஷ்டவசமாக, தற்போது பதவியில் உள்ள ஆளும் தரப்பினருக்கு அவ்விதமான சமிக்ஞைகள் எதனையும் கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதனை எதிர்ப்பதாக கருத்தக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அந்த விடயங்களை மேற்கொண்டே ஆக வேண்டும்.

ஏனெனில் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் நல்லிணக்க, மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான செயற்பாடுகளைக் காண்பிக்க வேண்டும் அவ்வாறு இல்லாது விட்டால் மேலும் மேலும் நெருக்கடிகளே ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும்.

தற்போதை நிலையில் ஆட்சியாளர்களுக்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன. முதலாவதாக முற்றாக ஐ.நா.தீர்மானத்தினை எதிர்த்து சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டு நடைபெறுவைக்கு முகங்கொடுப்பதாகும்.

இரண்டாவதாக, மாகாண சபைமுறைகளின் அதிகாரங்களை நீக்கி தேர்தலை நடத்தவிட்டு பின்னர் புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கிவிட்டு அதிகாரக்குவிப்பைச் செய்து இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினை காலங்கடத்தி ஏமாற்றுவதோடு அவ்வப்போது நெருக்கங்களையும் விரிசல்களையும் காண்பித்து சீரற்ற நிலைமைகளை பேணுதல். அதுமட்டுமன்றி இனக்குழுமங்களை மையப்படுத்திய நெருக்கடிகளை ஏற்படுத்துதல் மூன்றாவதாக, நிலைமைகளைப் புரிந்து ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் தேசிய ரீதியிலான வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை ஏற்படித்தி ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கும் மீளாய்வு செய்யப்படும்போது முன்னேற்றகரமான நிலைமைகளை வெளிப்படுத்தல்.

இந்தத் தெரிவுகளுக்குள் ஒன்றை கையிலெடுக்கும் போது அதற்கான பிரதிபலன்களும் உடனுக்குடனே கிடைக்கும் என்றார்.