அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வரும் ரணில் – வெளியாகியுள்ள தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தயாராகி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

காலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வஜிர அபேவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது.

பொதுத் தேர்தல் முடிந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அந்த பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

எனினும் அப்போது அவர் அதனை ஏற்க மறுத்தார். இந்த நிலையில், அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.