வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – இருவர் காயம்

வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் இருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றிற்குள் நேற்றையதினம் இரவு வாள் மற்றும் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில் அந்த குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதல்தாரிகள் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.