அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி

இரண்டம்ச கோரிக்கையை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அன்னைபூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

அதன்போது, மாணவர்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூபி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பை சேர்ந்த அன்னைபூபதி 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்தார். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராவார்.

போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புலிகளுடன் பேச்சு நடாத்தி தீர்வு காணவேண்டும் என இரண்டம்ச கோரிக்கையை முன் வைத்து 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரது போராட்டத்தை முடக்க இந்திய இராணுவம் பல வழிகளில் முயற்சித்தது. உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் என சிலரை கைது செய்தனர். ஆனாலும் அவர் போராட்டத்தை கைவிடாது உறுதியாக முன்னெடுத்தார்.

அவரது கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர் நீத்தார்.

வவுனியா

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் கடந்த 1,520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தை அடைவதற்கு , எங்களுக்கு அமெரிக்காவே தேவை என்றனர்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பில்  இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக் கோரி உண்ணா நோம்பிருந்து உயிர் நீர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுஸ்ட்டிக்கப்பட்டது.