மீனவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குமாறு மஹிந்த ஆலோசனை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலினால் சமுத்திரத்திற்கும், கரையோர பிரதேசங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்து  கண்காணிக்க இன்று  சனிக்கிழமை உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமுத்திரத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமான முறையில் முன்னெடுக்குமாறு பிரதமர்  சமுத்திர சூழல்  பாதுகாப்பு  அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக அன்றாட வருமானம் பெறும் வகையில் மீன்பிடி  தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி  தொழிலுடன் ஒன்றினைந்த  தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்ளுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.