பொய் குற்றச்சாட்டில் திட்டமிட்டு முன்னாள் போராளி கைது

யாழில் நேற்று (28.05.2021) கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பலாலி படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, முன்னாள் கடல் புலி உறுப்பினரை கைது செய்ததுடன் 2 கிலோ சக்திவாய்ந்த கிளைமோர் வெடிகுண்டு, ரி -56 துப்பாக்கி ரவைகள் 14, 45 கைத்துப்பாக்கி ரவைகள், 12.7 வகை ரவை ஒன்று மற்றும் இரண்டு மீட்டர் நீள டெட்டனேட்டர் நூல் என்பனவும் மீட்கப்பட்டன.

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்- என்றுள்ளது.

சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தினரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாகியிருந்த அவர் நீதிமன்றில் சரண்டைந்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது