மிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வானகம் சிக்கியது: சாரதி கைது

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில்  வீதியோரமாக  சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.  சம்பவம் தொடர்பில் கொடிக்காம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை கண்டறியப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை தேடிய நிலையில், குறித்த டிப்பர் வாகனம் நேற்றுமாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது கொடிகாம பொலிஸாரினால் வாகனம் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோது, ஆரம்ப கட்ட விசாரணையில் டிப்பர் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும் , சாரதி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதால் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் நேற்றைய தினம் மீள கட்டும் பணிகளை சிலர் முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது