கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்குக்கு அமெரிக்காவில் குடியுரிமை? ஜோ பைடன் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் பல திட்டங்களை எடுக்க தயாராகி வருகின்றார்.

அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஜோ பைடன் இடும் முதல் கையெழுத்தாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன்படி அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக்குகுடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்மூலம் ஆண்டுதோறும் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து தஞ்சமடைந்தவர்கள் தான், அந்நாட்டை வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

அதன்படி ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நவீனமாக்கப்படும்.

குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேர் தங்கள் குடும்பத்தாருடன் இணையும் வகையில் குடியுரிமை வழங்கப்படும்.

மேலும் வேலை அடிப்படையிலான விசாக்கள் ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.