இன, மத பேதமற்ற தலைவரை இலங்கை எப்போது தெரிவுசெய்யப் போகின்றது?- மங்கள

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப் போன்று, இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு வாழ்த்துத் தெரிவித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸும் தெரிவாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உலக அளவில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர்களுக்கு வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் விதமான மங்கள சமரவீர வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,

“நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும்.

இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது?” என குறிப்பிட்டுள்ளார்.