அமெரிக்கா பாதுகாப்பு துறை மந்திரி எஸ்பர் திடீர் நீக்கம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பர்.
இந்நிலையில், மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.
அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின்  இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே அக்டோபர் மாத இறுதி வாரத்தில் மார்க் எஸ்பர் இந்தியா வந்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அவர் டெல்லி வந்தது முக்கியத்துவமாக கருதப்பட்டது.