வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 25 நாட்களாக தொடரும் ஊரடங்கு; வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்கள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் 24 ம் திகதி முதன்முதலாக பதினொறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 25 ம் திகதி காலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று 18 ம் திகதி புதன்கிழமை வரை 25 நாட்களாக தொடர்ந்து செல்கிறது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நாளந்த வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இரவு பகலாக கடும் பாடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இதுவரை 59 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள சுகாதாரப் பிரிவினர்கள் காத்திருக்கின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தோடு வீதிகளுக்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.