விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அலிக்கு 5 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாக இருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்துக்குள் வைத்து,  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணி போராட்டக்காரராக விளங்கிய தானிஸ் அலி  என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான்  திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி தானிஸ் அலி எனும் சந்தேக நபர் கடந்த ஜூன் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்க வந்த போது நிதியமைச்சின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் மன்றில்  ஆஜராகாமையால் அந்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பிடியாணைக்கு அமைய, கைது செய்யப்பட்ட குறித்த நபரை கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்ய நேற்று ( 27) சி.ஐ.டி.யினர் கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர் கடந்த ஜூன் 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த போராட்டகாரர்கள் குழுமியிருந்த பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர்களை மீது பலத்காரமாக தடுத்து வைத்த சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

பின்னர்  கடந்த ஜூன் 13 ஆம் திகதி கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்து நேரலை ஒளிபரப்புகளுக்கு தடை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்  விசாரணைக்காக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ள அவர்,  பின்னர் உடல் முழுதும் மறைக்கப்பட்டு நேற்று ( 27) கோட்டை நீதிவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது  அங்கு விடயங்களை முன்வைத்த பொலிஸார், சந்தேக நபர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்து மீறிய விடயம் தொடர்பில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டி இருப்பதால் அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் , நுவன் போபகே உள்ளிட்ட சட்டத்தரணிகள்  நீதிவான் முன் பிரசன்னமாகியிருந்தனர்.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் பொலிசார் அடையாள அணிவகுப்பை கோருவதாக இதன்போது சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், முதலாம் திகதி அவரை ரூபவாஹி கூட்டுத்தாபன விவகார வழக்குக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.

இந் நிலையில், இன்று ( 28) கறுவாத்தோட்டம் பொலிசார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள்  அத்துமீறியமை குறித்த  வழக்கை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்தனர்.

இதன்போது  தற்போதும் விளக்கமறியலில் உள்ள தானில் அலிக்கும் ,  மற்றொரு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படும்  சமிந்த கெலும் அமரசிங்கவுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்குமாறு பொலிஸார் கோரினர்.

இதன்போது,  இந்த விவகாரத்தின் சந்தேக நபராக  அடையாளம் காணப்பட்டுள்ள தானிஸ் அலி என்பவர், கோட்டை நீதிமன்ரால் பிரிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதலாம் திகதி மன்றில் ஆஜர் செய்யுமாறு  சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதிவான், வழக்கின் சந்தேக நபரின் அடையாளம் ,  புகைப்படம், வீடியோக்கள்  ஊடாக பகிரங்கமாக வெளியாகி இருப்பதால் அடையாள அணிவகுப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்