இலங்கைக்கு வழங்கிய கடன்- அது பொய்யான தகவல்! சீன தூதரகம் விளக்கம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்குப் பதிலாக அதனைப் பயன்படுத்தி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இது பொய்யானது என இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 

​​இந்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பது கடினம் என சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும், தேவைப்பட்டால், சீனக் கடனைப் பயன்படுத்தி இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை ஈடுசெய்ய தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதான தடையாக இருப்பது சீனாவினால் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க அவர்கள் விரும்பாததே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவிடம் இருந்து இலங்கை சுமார் 7.1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று (28-08-2022) மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளுக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் சி ஷென்ஹோங், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்குவோம் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சீனத் தூதுவர் தெரிவித்தார்.