உக்ரேனுடனான போரில் பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்ய படை – உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி குற்றச்சாட்டு

ரஷ்ய படையினர் உக்ரேனுடனான போரில் பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

போரில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் பேசிய உக்ரேனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி கூறியதாவது;-

ரஷ்ய படைவீரர்கள் உக்ரேன் மீது படையெடுப்பதில் “முறைகேடாகவும்,வெளிப்படையாகவும்” பாலியல் பலாத்காரத்தை  “ஆயுதமாக” பயன்படுத்துகின்றனர்.

பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் கொடூரமான, மிருகத்தனமான வழியாகும். மேலும் இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போர்க்காலத்தில் சாட்சியமளிப்பது கடினம், ஏனெனில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை.

ரஷ்ய வீரர்களின் மனைவிகள் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கவில்லை. ரஷ்ய வீரர்கள் இதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்: அவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், நாங்கள் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களை கைப்பற்றி உள்ளோம்.

உண்மையில், ரஷ்ய படைவீரர்களின் மனைவிகள் இதை ஊக்குவிக்கிறார்கள், ‘போ, அந்த உக்ரேனியப் பெண்களைப் பலாத்காரம் செய், இதை என்னுடன் பகிர்ந்து கொள்ளாதே, என்னிடம் சொல்லாதே’ என்று கூறுகிறார்கள் என கூறினார்.

இதுகுறித்து சர்வதேச சமூகத்திடம் முறையிட்ட உக்ரைன் முதல் பெண்மணி, இதை ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிப்பது மற்றும் குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்புக்கூற வைப்பது மிகவும் முக்கியமானது. இத்தகைய குற்றங்களுக்கு ரஷ்ய வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.