நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.
வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 150 – 200 வரையாக நிலவுகிறது. இதனையே ஆரோக்கியமற்ற நிலை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை மற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 114 ஆகவும், மன்னாரில் 117 இல் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார்.
இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவில் இருந்து வரும் காற்றால், கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது.மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.