யாழில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி உடைந்தது! வெளியேறிய விக்னேஷ்வரன்- மணிவண்ணன்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையிலேயே விக்னேஷ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

முதலாம் இணைப்பு
விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மணிவண்ணன் கருத்து
இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், “தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகளில் இணக்கம் காணப்படவில்லை. மேலும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்து விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சின்னத்தில் ஏற்பட்ட முரண்பாடு மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் வெளியேற காரணம் என தெரிய வருகிறது.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இதன்போது இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச் சின்னம்
ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நேற்றைய கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இறுதி முடிவை எட்டுவதற்காக கலந்துரையாடியுள்ளனர்.

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது. நாளை சனிக்கிழமை (14) கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வி.மணிவண்ணன், குருசாமி சுரேந்திரன், வி.பி.சிவநாதன், வ.பார்த்தீபன், வேந்தன்,துளசி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.