விக்னேஸ்வரன் வெளியேறிய பின் உதயமானது ஐந்து கட்சிகளின் கூட்டணி

ஐந்து கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள இன்று (13.01.2023) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து குறித்த கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணி தொடர்பான சந்திப்பு
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை சந்திப்பொன்று ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் ஏற்பட்ட சின்னம் தொடர்பான இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழரசு கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.