வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

இன்று பிற்பகல் 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதுடன் இன்று (31.01.2023) மேற்கு நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், படிப்படியாக மேற்கு -தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (01.02.2023) இலங்கை கரையை கடக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என எதிர்வு கூறியுள்ளது.

மழை வீழ்ச்சி தொடர்பான தகவல்
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய இடங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.