உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே எஞ்சியுள்ளது -மஹிந்த தேசப்பிரிய

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் தட்டுப்பாடு , வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்படாமை மற்றும் நிதி அமைச்சினால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையையே தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவது கடினம் எனத் அறிவித்துள்ளமைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது.

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்யார் என்பது தொடர்பில் என்னால் கூற முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நான் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனக் கூற முடியாது.

துடுப்பாட்ட களத்தில் இருப்பவரால் மாத்திரமே பந்தை எவ்வாறு கையாள முடியும் என்பதைக்கூற முடியும். பார்வையாளர்களால் அதனைக் கூற முடியாது.

எனவே பதவியில் இல்லாமல் வெறும் பார்வையாளனாக மாத்திரமேயுள்ள என்னால் எதனையும் கூற முடியாது.

அவ்வாறு கூறுவது பொறுத்தமானதாகவும் இருக்காது. உண்மையில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளது என்றார்.