நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்திக்கவுள்ளார்.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று (10.04.2023) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் அவை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்படும் என அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தாவும் ஜீவன் தொண்டமானும் வாக்குறுதி அளித்தனர்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்
அதனை நிறைவேற்றாது ஏமாற்றியதன் விளைவாக ஆலய நிர்வாகம் இதனை இந்திய தூதரகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஊடாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் ஆலய வரலாறு, தற்போதைய வழக்கு நிலவரங்கள், இடையூறுகள் தொடர்பாக கேட்டறியும் நோக்கில் இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை
இவ்வாறு இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தை கையில் எடுப்பதனால் இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுமா அல்லது சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் அழுத்தம் வழங்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் ஏற்கனவே இந்தியா கடும் அதிருப்தி கொண்டு அதனை இலங்கை அரசிற்கு தெரிவித்துள்ள அதேநேரம் வெடுக்குநாறியும் இந்தியாவின் கையில் சென்றிருப்பது தமிழர்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.