பாரபட்சம் காட்டும் சிறிலங்கா தூதரகம் – பிரித்தானியாவில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்கள்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையால் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்குள்ள தூதரங்களிலும் இலங்கையின் இனவாத அதிகாரிகளின் கடும்போக்குத்தன்மையால் பயங்கரவாதிகளாக புறக்கணிக்கப்படும் மனோநிலை காணப்படுவது உணரப்படுவதாக தெரிவித்து தூதரகத்திற்கு முன்பு தமிழ்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பு (FREEDOM HUNTER S 4TAMIL)இன்று பிரித்தானியாவில் அமையப்பெற்றுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள குடிபுகு குடிவரவு திணைக்களத்திலும் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதும், இழுத்தடிக்கப்படுவதும் மாற்றான் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும், ஏனோதானோ என்ற அலட்சியப்போக்குடன் தமிழர்களை அணுகுவதும் எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்.

சிங்களவர்களுக்கு மட்டும் எந்தவித கேள்விகள் இன்றி அவர்களின் கோரிக்கைகளை தட்டிக்கழிக்காமல் கவனத்தில் எடுத்து உடனடியாக அவர்களுக்கு அனைத்தும் வழங்கப்படுகிறது. தமிழர்கள் அவசரமாக செல்வதற்கான முறைப்படி விண்ணப்பித்தாலும் இலங்கை நாணயப்படி இரண்டரை இலட்சம் இலஞ்சம் வழங்கியே சிலருக்கு சான்றாதாரங்கள் வழங்கப்பட்ட வரலாறுகள் உண்டு.

அவ்வாறு பணம்கொடுக்க மறுத்தால் தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளர் சான்றிதழ் என தேவையற்ற விடயங்களை கேட்டு இழுத்தடித்து பயங்கரவாதிகளைப்போல் இலங்கைத்தூதரகம் நடத்துவது மிக மோசமான மனித உரிமை மீறலாகவே எம்மால் கருதமுடிகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை பலர் வெளியில் கூற முடியாமல் தமக்குள்ளே அடக்கிவைத்துள்ளனர். இந்த முறையற்ற கீழ்த்தரமான செயலை உடனடியாக நிறுத்தி தமிழ்மக்களுக்கான பாரபட்சத்தை தீர்த்து தருமாறு வேண்டியும் .

இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களை இடம் பெயர்வு மூலமாகவும்,யுத்தத்தினால் உயிர்களை பறித்தும் தற்போது தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களை அடையாளம் இல்லாதவாறு செய்வதற்காக அவர்களுடைய காணிகள் அதுபோன்று பல நூற்றாண்டு காலமாக இருந்த ஆலயங்களை இனவாதம் கொண்ட பெளத்த தேரர்கள் மூலம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் இல்லாமல் செய்கின்றமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை இனவாதத்துடன் செயற்படும் பிரித்தானியாவில் உள்ள இலங்கை குடிபுகு குடியகல்வு அதிகாரிகள் காணொளி எடுத்து மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்கள்.