இரட்டை நிலைப்பாட்டுடன் சிறிலங்கா அரசாங்கம் : சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொண்டு சர்வதேச சமூகம் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்தார்.

மேச்சல் தரை காணியிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதாக அதிபர் கூறிய போதிலும், இதுவரை அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையென அவர் சாடினார்.

அறவழிப் போராட்டம்
மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தொடர் அறவழிப் போராட்டம் 55 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெனாண்டோ,மட்டக்களப்பு மாவட்ட குடிசார் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் மற்றும் தென்னிலங்கை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சகோதார ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.