ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட நடவடிக்கையை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரை ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை முதற்கட்டமாக கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான பகுதிகள், அதேபோல் மகரகம மற்றும் கோட்டை வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீர் கட்டண நிலுவை செலுத்தாமல் உள்ள நுகர்வோரின் நீர் இணைப்புகள், குறிப்பிட்ட காலப்பகுதியில் துண்டிக்கப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தங்களது நீர் விநியோகம் தடையின்றி தொடர வேண்டுமெனில், 2026 ஜூலை 13 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்து நீர் கட்டணங்களையும் முழுமையாகச் செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம், தேவையற்ற அசௌகரியங்களையும் நீர் விநியோகத் துண்டிப்பையும் தவிர்க்க முடியும் என்றும் அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.




