ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்ற முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் 15-12-2020 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (19.12.2020) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்திய இலங்கை அரசாங்கம் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு வாழ்வாதார தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி, தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் எமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்து கொண்டு இருக்க முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.