தமிழர்களுக்கு எதிராக ஐ.நா விடயத்தில் சுமந்திரன் – சிவகரன் கூட்டு! பின்னணியில் யார்?

சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி, கைக்கூலி, வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன், நீதி கோரல் விடயத்தில் எப்படி சுமந்திரனுடன் கை கோர்த்தார் என வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவை வலிந்து பொறுப்புக்கூற வைக்கும் தீர்மானத்துக்கு ஒருவருட காலஅவகாசம் வழங்கும் நிலைப்பாடு திரு நீதி அரசர் விக்கினேஸ்வரனும் அவருக்கு பின்னால் இருப்பவர்களினால் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த தீர்மானத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதே நிலையில் எந்தவொரு தீர்மானத்துக்குள்ளும் ஒரு வருட கால அவகாசத்தைத் தமிழர் தரப்பு முன்வைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

எமது உறவுகள் சிறைக்குள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் யாவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை தொடர்பில் பொதுச்சபையில் கையளிக்கப்பட்டு ஒருவருட கால அவகாசத்துடன் கோரிக்கை முன் வைக்கப் போவதாக நாம் அறிந்தோம்.

அவ்வாறு ஒரு வருட கால அவகாசம் என்பது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு இதனை நடைமுறைப்படுத்த வழங்கப்படுகிறதா ? அப்படி நடைபெறாத பட்சத்தில் மாற்றுத் திட்டமென்ன? என்கின்ற விடயங்கள் தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தரத் தவறி விட்டதாகவே நாம் பார்க்கிறோம்.

மற்றவர்களை விமர்சிப்பதை வாழ்க்கையாகக் கொண்ட, சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி கைக்கூலி வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன் நீதி கோரல் விடயத்தில் எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தாரென்ற மர்மத்திற்கு விடை என்ன?

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது, போர்க் குற்றம் நடந்ததிற்கான எந்த ஒரு ஆதாரமுமில்லை, புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள், புலிகள் பலவந்தமாக ஆள்கடத்தல் செய்தார்கள் எனப் பொய் உரைத்து ரணில், மைத்திரி அரசின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை சிங்கள பௌத்த பேரின வாதிகளைச் சர்வதேசத்தில் தப்ப வைத்த சுமந்திரனை முதலாவது கலந்துரையாடலில் சிவகரன் களம் இறக்கியதன் பின்னணியில் யார்?

யார் பிழையாக வழிநடத்தப்படுகிறார்கள், சிவகரனா நாங்களா? என்பதை சிவகரன் மற்றவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை தொடர்பில் சிவகரனின் நிலைப்பாடு என்ன?

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராகக் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுத்தார்கள்.

யார் ஓ.எம்.பியை எதிர்ப்பதற்குத் தலைமை தாங்கினார்களோ அவர்களை அழைத்துக் கொண்டு சிவகரன் ஓ.எம்.பி அலுவலகத்துக்குள் முடக்கினார்.

உள்ளக விசாரணையையும் ஓ.எம்.பியையும் எதிர்த்த மக்களுக்கும் சிவில் சமூகங்களுக்கும் சிவகரன் என்ன பதில் கூறப்போகிறார்?

யாழில் அலுவலகம் திறக்கப்பட்டதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் சிவகரனும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தாததன் பின்னணியில் யார் என்பதை சிவகரனே கூற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மரணச்சான்றிதள் பெற்றதன் பின்னணியில் சிவகரனும் அவருக்குப் பக்கத்திலிருந்து பக்க வாத்தியம் பாடும் நபர்களுமே பொறுப்பு கூற வேண்டியவர்கள்.

புலம் பேர் அமைப்புக்கள் ஒன்றுபட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பன்னாட்டு இராஜதந்திரிகளை கூட்டத்தொடருக்கு முன்னதாக கையாள்வதற்கான ஒரு செயல் திட்டங்களை உருவாக்கும் நிலைப்பாட்டில் முன்னேற்றம் குறைந்தே காணப்படுகின்றது.

சர்வதேச சமூகம் நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்பு குற்றங்கள், போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களைச் சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துதல் அவசியமானதொன்றாகும்.

இவ்வாறான நிலைப்பாட்டில் நீதிப்பொறிமுறையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ, அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றிற்கோ கொண்டு செல்வதற்கான பரிந்துரையாக அமைய வேண்டும்.

குற்றங்கள் இழைத்தவர்களை வலிந்து பதிலளிக்கக் கூடிய சிறப்பு விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்படல் வேண்டும்.

அப்பொறி முறையானது மியன்மார் விடயங்களைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட மியன்மாருக்கான சர்வதேச புலனாய்வு விசாரணைப் பொறிமுறையை ஒத்ததாகவோ,அல்லது சிரியா விவகாரங்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச சிறப்புப் புலனாய்வு விசாரணைப் பொறிமுறையாக அமைய வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் என ஏன் இரண்டு நீதிமன்றுகள் உள்ளன?

தமிழர்கள் இந்த இரண்டு நீதிமன்றங்களையும் நோக்கி வேலை செய்ய வேண்டுமா என்ற வினாக்களுக்கு விடை என்ன?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 1998-ல் ரோம் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

இது ரோம் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட சர்வதேச சட்ட மீறல்கள் குறித்துத் தனி நபர்கள் மீது இனப்படுகொலை உள்ளிட்ட மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

ஆனால் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நாடுகள் மீது மாத்திரமே அதற்கு அதிகாரம் உண்டு.

இலங்கை இந்த ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத ஒரு நாடு என்ற காரணத்தாலேயே தமிழர்களால் இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லை என்பதே ஒரு கசப்பான விடையமாகும்.

வேறு வழிகள் இல்லையா எனப் பரிதவிக்கும் எம் உறவுகளுக்குக் கடினமான மாற்று வழிகள் உள்ளன என்பது ஆறுதலைத் தந்தாலும், அந்த வழிகளில் எமது முன்னேற்றம் எவ்வளவு தூரமுள்ளது?

பாதுகாப்புச் சபை தமிழர்கள் பிரச்சனையைப் பரிந்துரை செய்யும் பட்சத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எமக்கான நீதியைப் பெற்றுத்தர முடியும்.

அதை விடச் சரத்து15- BIS( ARTICLEA 15 BIC ) பிரகாரம் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்ட அரசுகளின் பரிந்துரை அடிப்படையிலும் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிகளை விசாரணை செய்து தண்டனை கொடுக்க முடியும்.

இந்த வழிகளில் எவ்வளவு தூரம் எமது முன்னேற்றமிருக்கிறது? சர்வதேச நீதிமன்றம் என்ன செய்கிறது என்று ஆராயும் பட்சத்தில் இந்தநீதிமன்றமானது ஐக்கிய நாடுகளின் உயரிய முதன்மை நீதிமன்றமாகும்.

இது அரசுகளுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதோடு, ஐ. நா. ஒப்பந்தங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.

எப்படி மியன்மார் அரசைக் காம்பியா ( THE GAMBIA )என்கிற அரசு இதர 58- அரசுகளுடன் இணைந்து சட்டத்தின் முன் நிறுத்தியதோ அது போல இலங்கை அரசையும் வேறு அரசுகள் தமிழருக்கு உதவ முன்வரும் பட்சத்தில் நிறுத்த முடியும்.

கட்டமைப்பு சார் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவது, அதைச் செய்தவர்களைத் தண்டித்தல் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களைப் பாதுகாத்தல் என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் ஒரு அரசு இலங்கை மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தனி நபர்களை மாத்திரமே நிறுத்த முடிகின்ற அதேவேளை, ஐ. நா.வின் சர்வதேச நீதிமன்றில் இலங்கை அரசை நிறுத்த முடியும் என்பத்தைத் தெளிவாக்கப் புரிந்து கொண்ட நாம், தமிழர்கள் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் இந்தவிடயம் தொடர்பாக அந்தந்த அரசுகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

இலங்கை அரசு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பல்வேறு மனித உரிமைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலான ஆதாரங்களைச் சேகரித்தல், ஆய்வு செய்தல், ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை செயற்பாடுகளை முன்னெடுத்தல், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சர்வதேச நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் குற்றவியல் நடவடிக்கைகளை முன் நகர்த்தல்களுக்கான ஆவணங்களைத் தயாரித்தல், கடந்த கால மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக எதிர்கால நிகழ்வுகள் குறித்த பரிந்துரைகள் செய்வதன் மூலம் எமக்கான நீதி சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்