வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஏ – 9 வீதியை மறித்து போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ -9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தமது கோரிக்கை தொடர்பில் ஆளுநர் தம்மை சந்திக்காதமையை எதிர்த்தே வீதி மறியல் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் மூன்றாவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது .

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இன்று மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்