மீண்டும் திறக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா இந்த நினைவு முற்றத்தை திறந்து வைக்கவுள்ளார்.

ஏற்கனவே பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் சர்ச்சைகளினாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் , எதிர்வரும் 23ஆம் திகதி அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.