வணிகக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; அமெரிக்கா அதிரடி பதிலடி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது புதிய கட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையில் வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய இந்த “வெளிப்படையான ஆக்கிரமிப்புக்கு” அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள இந்த புதிய கட்டத் தாக்குதலானது, இந்த ஒரே வாரத்தில் நடத்தப்படும் மூன்றாவது சுற்றுத் தாக்குதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஈரான் மீண்டும் அதே தவறைச் செய்து, தவறான முடிவை எடுத்துள்ளது. அதற்கான கடுமையான விளைவுகளை அவர்கள் இப்போது சந்தித்து வருகிறார்கள்,” என அவர் எச்சரித்துள்ளார்.




