முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார் கஜேந்திரகுமார்: ஈழத்தமிழர் விவகாரம் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது ஈழத்தமிழர்கள் சார்பான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூலக் கடிதம் ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் ஈழத்தமிழர் இனவழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இந்திய – ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் விவகாரத்திற்கு நிலையான தீர்வு காண்பது மற்றும் இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த முக்கிய சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் மற்றும் சட்டத்தரணிகளான கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




