2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு இணங்க இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அனைத்து அமைச்சுக்களும் அரச நிறுவனங்களும் கட்டாய செலவுக் குறைப்பு எல்லைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் பூர்வாங்க பாதீட்டு மதிப்பீடுகளுக்குள்ளேயே அடங்க வேண்டும் என்றும், இதற்கான தரவுகளை ‘ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை’ (ITMIS) ஊடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது பாதீட்டு மதிப்பீடுகளை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பாதீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.




